07 ஆகஸ்ட் 2009

இயற்கை தந்த இன்ப ஊற்று!

காடழித்தார் களனி செய்தார்
காபனையும் உயர வைத்தார்
சூழற்சம நிலையை
சூழ்ச்சியினால் உயர வைக்கும்
மானிடவர் செய்கையினைச்
செங்கதிரோன் ஏற்கவில்லை
கோபக்கடுங்கனலைக்
கொட்டி அவன் இறைத்திட்டான்.
தேகம் விதிர்விதிர்த்து
திரண்ட நீர் உடல் பனிக்க‌
காகம் குருவியினம்
கனமிருகம் இவையெல்லாம்
ஓலமிட்டு உயிர் தவிக்கும்


பாகம் பாகமதாய்

பயிர் நிலங்கள் வாய் பிளக்க‌

சாகத்தான் வேளையிதோவென்று

சனங்களெல்லாம் பரிதவித்தார்

பிள்ளை செய்த குற்றத்தை

பெற்றோரே பொறுத்தல் போல்

கள்ளமில்லா இயற்கையன்னை

கைகொடுக்க உளம் நினைந்தாள்

மெள்ள மெள்ள ஆங்காங்கே

மென்பஞ்சைத்தூவி விட்டாள்.

அள்ள அள்ளச் சுரக்கும்

அமுதசுரபியல்லோ இயற்கையன்னை

மேகத்திரள்களெல்லாம்

மேல்வானிற் சேர்ந்தனவே

வேகத்தால் ஓடிய அம்மேகங்கள்

ஒன்றையொன்று மோகத்தால்

முத்தமிட்டுக் கண்சிமிட்டும்‍- அவை

"இச்"சொலியின் சத்தத்தால்

இச்சகத்தில் அச்சமெழும்.

நகக்கீறல் செம்மையதே

நானிலத்தில் மின்னலதாம் புணர்ச்சி கொண்ட மேகங்கள்

நீர்க்குழந்தைச் சூல்கொள்ள‌

கற்பமுற்ற அவை வயிறு

மட்குடம்போல் ஆயினவாம்

நீர்க்குழந்தை வயிற்றிலிரான்

நிலந்தவழ ஆசைகொண்டான்

தாய் வயிறு உதைத்து அவன்

தரணி வரச் சண்டை செய்தான்

வயிறுழைந்த வான் மகளும்

வாந்திவர வாய் திறந்தாள்

பதனீர்க்குடமுடைந்து

பார் மேற் தேன் பொழிய‌

தாகத்தாற் தவித்த பயிர்

தலை நிமிர்ந்து சிரிக்குதடா!
நீரோடிமேனி தொட‌

நிலமடந்தை வெட்கித்து

நீராடி உடல் துடைத்து

மரகதப் பட்டணிந்து கொண்டாள்

வேரோடி மரம் செழித்து

காய் கனிகள் நிறைந்தது காண்!

போராடி வெல்வாயோ

இயற்கையை நீ சொல்லு!

இயற்கையன்னை மார்புகளாம்

உயர் பெரிய மலைகளிலே

பால் சுரந்து ஊற்றெடுத்துப்

பசி தீர்க்க ஓடியதாம் குட்டை குளம் நிறைந்து

குதூகலித்து ஓடிய நீர்

வட்டைக்குட் பாய்ந்து

வயல் நிறைந்து நின்றதம்மா!

மலையருவி தந்த நீரே

வயலருவி விழைத்தது பார்!

கருத்துகள் இல்லை: