சின்னப் பூனைக் குட்டி நான் சிறுத்தைப் புலி அல்லவே
வேண்டாம் என்னை விட்டிடு
விபரீதங்கள் விளைந்திடும் !
தொட்டதில்லை ஆயுதம் நான்
சுட்டதில்லை யாரையும்
கெட்ட கெட்ட வார்த்தை பேசி
கேடும் விளைத்ததில்லையே !
கண்ணை மூடி மதுவருந்தும்
மானிடரின் செய்கையைக்
கண்டுதானே பாலைக் கூடக்
கண்ணை மூடி அருந்தினேன்
உந்தன் செய்கை செய்வதால்
என்னை மனிதன் என்பீரோ ???
என்னைப் போல ஒருவன் செய்தால்
என்னைக் கூட வைவீரோ ??
பூனை போலப் பதுங்கி ஒருவன்
புலி போலப் பாய்ந்திடில்
என்னை கூடப் புலியென்று
எண்ணிடுதல் நியாயமோ??
உனக்குக்கூட உதவிதான்
எந்தன் செய்கை மனிதனே!
எலிப் பிடிக்கப் பதுங்கினேன்
என்னை ஒன்றும் செய்யாதே!
