மொட்டொன்று அரும்பியது
மலரும் நாள் பார்த்திருந்தேன்
சட்டென்று ஒரு நாள் -என்
முகம் பார்த்து சிரிக்குமது
மட்டில்லா மகிழ்ச்சி கொள்ளும்
மணந்து நான் சுகம் பெறுவேன் .....
கட்டவிழ்ந்து ஓடிய என்
கற்பனைக்கு முடிவாக
சட்டென்று ஓர் காலை
சொட்டென்று தேன் வழிய
சுந்தரியாள் முகம் மலர்ந்தாள்
எட்ட மணம் வீசும் அத்தர் மணத்தழகி
அவளுக்கே அபாயமென்று
அவளறியாள் அவள் கவர்ச்சி
கண்பட்ட கன்னியரின்
கற்பதனை சூறை கொள்ளும் கயவனாம்
எங்கிருந்தோ வந்ததோர் கருவண்டு
பார்த்திருந்த என்னெதிரே
பலாத்காரமாய் முத்தமிட்டு -அவள்
கற்பதனை காவுகொண்டு கர்ச்சித்துப் பறந்ததடா!
மனமழிந்து முகம் கசங்கி-என்
மங்கையவள் தலை குனிந்தாள்
உள்ளமெலாம் நோக உணர்வெல்லாம் கெட்டழிய
ஒரு பொழுதே எந்தனுக்கு
யுகமொன்றாய் கழிந்தது காண்!
சிந்தனையே கனவாக நொந்தலைந்த மனத்தோடு
காலை விடிந்தவுடன்
கண்மணியாள் பக்கம் சென்றேன்!
கண்டதோர் காட்சியதால்
தலை சுற்றி நிலம் சாய்ந்தேன்!
மானமொன்றே பெரிதென்று-என்
மங்கையவள் கருதியதால்
வாழப்பிடிக்காமல் வையகத்தில் இருக்காமல்
அங்கங்கள் சிதற அவள்
அழித்திருந்தாள் வாழ்வதனை!