
பத்தினிப்பெண்ணவள் பார்வை பட்டால் -அந்த
அக்கினித்தீயும் அணையுமடா!
உத்தமி தந்த புத்திரனே -அதை
உருக்கமாய் நான் சொல்லக் கேளுமடா!
பெண்ணவள் உயிருள்ள பதுமையடா -அதில்
உணர்வுகள்கூட உள்ளதடா! -அப்
பதுமை தந்த புதுமகனே -அந்த
உணர்வுகள் உன்னிலும் உள்ளதன்றோ?
அன்புக்கு ஏங்கிடும் பெண்மனமே- அது
துன்பம் கண்டால் துவண்டிடுமே!
வெண்பட்டுப்போலும் அவள் மனமாம் -அதில்
கரும் புள்ளி எதனால் உருவாகும்?
பெண்ணவள் கொண்டாள் பலவடிவம்- நீ
கண்டது ஒன்றே பேய்வடிவம்!
பேய்தான் உனக்குத் தாய் என்றால் -அந்தப்
பெருமை உனக்கே கேள் மகனே!
பெண்ணவள் ஏனோ வெறுக்கின்றாள்? -இந்த
ஆணின் நடையால் ஒதுக்கின்றாள்.
"அவல்" என்று நீயும் இடிக்கின்றாய்
அதுகண்டு"அவளு"ம் துடிக்கின்றாள்!
ஆண்மகன் என்று சொல்கின்றாய் -உன்
மனைமகள் அவளை வெல்லாமல்
இன்னொரு பெண்ணைக் கொள்கின்றாய்
அதனால் அவளைக் கொல்கின்றாய்!
அன்னை அக்கா அண்ணியென்று
அனைவரும் பெண்கள் அறியாயோ
கண்ணைக் குத்திக் கெடுக்கின்ற
கயமை ஒழித்து வாழ் மகனே!
இன்னும் சொல்ல வார்த்தை உண்டு
இன்னொருக்கால் நான் வருகின்றேன்!
2 கருத்துகள்:
நன்றாக இருக்கிறது, தொடரட்டும் ,வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா!
கருத்துரையிடுக